11 December 2007

பூ பூக்கும் ஓசை...


பூ பூக்கும் ஓசை...


பூக்களை புகைப்படத்துள் யார் அழகாக அடைக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள்னு சொல்லிட்டாங்க..சரி போட்டினு வந்துட்டா சும்ம இருக்க முடியுமா?நம்ம கைவரிசையைக் காட்ட வேண்டியதுதானே..எனக்கு புகைப்பட எடுக்கிற வித்தையெல்லாம் தெரியாதுங்க...ஆனால் அழகாக எடுத்திருக்கும் புகைப்படங்களை ரசிப்பேன்..

ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் நினைத்துண்டு.. அது எப்ப‌டி பிற‌ர் எடுக்கும் ப‌ட‌ங்க‌ள் அம்ச‌மாக‌ இருக்கிறதுனு..பள்ளியில் படிக்கும் பொழுது எனது அக்கா பங்கேற்றுக்கு கொண்ட ஆடை அலங்கார நிகழ்ச்சியில் நான் எடுத்த படத்தைப் பார்த்து இன்றும் எனக்கு திட்டுகள் விழும்...இப்பொழுது இருக்கும் கேமீராவை நான் வாங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன ஆனால் அதனை இப்பொழுது பயன் படுத்திய அளவிற்கு நான் நோண்டியது கிடையாது..

முதல் முயற்சி.. போலி பூக்கள்...
பரவால்லையே அதுவும் அழகுதான்...





அதுவும் பூக்களை படம் எடுக்க வேண்டும் என காலையில் வேலைக்குச் சொல்லும் முன் எடுத்த படங்கள்..
















இவைகளில் என்னை கவர்ந்தது , அந்த ஊதா வர்ணத்தில் உள்ள பூக்களே.. அவற்றில் மேல் உள்ள அந்த மழைத்துளிகள் அந்த பூக்களுக்கு மேலும் மெருக்கோட்டுகின்றது.. அதே வேளையில் அந்த பூக்களில் உள்ள ஒரு வாடிய பூ அந்த படத்தில் உள்ள அழகை கெடுப்பதை போல ஒரு உணர்வு.. அதற்காக அதை பிகாசா மூலம் வெட்டி எடுத்தேன்..







ஆனால் அதன் பிறகு அந்த பூக்களின் படத்திற்கு அவ்வளவான அழகு இருப்பது போல எனக்கு தெரியவில்லை.. ஏன் வாடியதானல் அதை ஒதுக்க வேண்டுமா என்ன? அதுவும் ஒரு பூதானே என அப்படியே விட்டுவிட்டேன்...






எல்லாம் இருட்டில் எடுத்த‌து போல‌ இருக்கிற‌தே என‌ காலையில் ஒரு 11 ம‌ணிக்கு வீட்டில் தொங்கிக் கொண்டிந்த‌ சில‌ பூக்க‌ளை எடுத்தேன்..










அப்பொழுதும் அதே ஊதா வ‌ர்ண‌ பூதான் என‌க்கு பிடித்திருந்த‌து.. ஊதா ஊதா ஊதாப்பூ... அதுதான் என‌க்கு இப்பொ பிடிச்ச‌ பூ..
ஆகாய‌த்தைப் பார்த்து எடுத்த‌தால் அந்த‌ பூக்க‌ளின் ப‌ட‌ம் இன்னும் ந‌ன்றாக‌ வ‌ந்திருப்ப‌தாக் என‌து யூக‌ம்..



ஆக‌வே நான் போட்டிக்கு தேர்ந்தெடுத்த‌ ப‌ட‌ம் கீழே உள்ள‌து தானுங்க‌..நீங்க‌ என்ன‌ நினைக்கிறீங்க‌னு சொன்ன‌ என்னோட‌ திற‌மையை இன்னும் வ‌ள‌ர்த்துப்பேனுங்க‌..



03 September 2007


சுதந்திரம்


"அம்மா! அப்பா என்னை நாளையிலிருந்து பள்ளிக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்லிவிட்டாரே... எனக்கு ஒண்ணுமே புரியலெ. நான் பள்ளிக் கூடம் போகணும் ..நீங்க அப்பாவுக்கு சொல்லுங்களேன்... தயவு செய்து என்னை பள்ளிக்கு அனுப்புங்கம்மா..." அம்மாவிடம் கெஞ்சினாள் ரங்கநாயகி.


"என்னடீ ரங்கு... இப்படி சொல்லுறெ... அப்பா மட்டும் தான் இப்பொழுது பால் மரம் வெட்டறாரு... இப்பொ பொறந்த தம்பியை யாரு பார்த்துப்பா? உன்னோட ஆறு தம்பி தங்கச்சிங்களெ பார்த்துக்கணும்டீ.. அதோட நீயும் எங்க கூட வந்து பால் மரம் வெட்டினால் ஐம்பது வெள்ளி கூட கிடைக்கும். நீயே சொல்லு... ", தனது கணவரின் செயலை நியாயப்படுத்தினாள் அந்த அம்மா... "

ஆமா உங்க நலனுக்காக என்னை பலியாக்கணும் அப்படிதானே?", குமுறி அழுதாள் ரங்கநாயகி.


அந்த வாரம்..தனது பள்ளிக்கூடத்தின் வழியே செல்லுகையில் அவளது ஆசிரியர் சொல்லிக் கொடுத்த ஆத்திச்சூடி நினைவில் வந்து மனதை வருத்தியது. ஒரு மாதம் ஆனது, ஒரு வருடம் ஆனது.. படிக்கவில்லை என்ற உணர்வு இருந்தாலும் குடும்ப சூழ்நிலைதான் மேலோங்கி அதை மழுங்கடிக்க செய்தது.
**********************************************************************

"மெர்டேக்கா..."

"மெர்டேக்கா...."

ஆம். இன்று மலேசியாவின் ஐம்பதாவது சுதந்திர தினம். வண்ண வண்ண ஆடைகள் அணிந்துக் கொண்டு பலர் மலேசிய கொடிகளை ஏந்திவருவது கண் குளிரும் காட்சி.

ரங்கநாயகி மணமுடித்து தற்பொழுது முப்பது வருடங்கள் ஆகிவிட்டன. தனது கடந்து வந்த பாதைகளை சற்று நினைவுக்கூர்ந்தாள். எத்தனை எத்தனை முட்கள்?

திருமணமானவுடன் கணவரை பின்பற்றி நகரத்திற்கு வந்தாள். புதிய அனுபவங்கள் பலவற்றை அவள் சந்தித்தாலும், அவளது இலட்சியம் அவளது வருங்கால் சந்ததியினரை ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவருவது என்பதே.


அதற்கு அவள் பாடுபட்டது கொஞ்சம் நஞ்சமல்ல. படிப்பறிவு இல்லாதவளுக்கு நகரத்தில் கிடைத்த வேலை வீட்டைச் சுத்தப்படுத்தும் தொழில்தான். அதை நாணயமாக செய்தாள், அவளுடைய கணவனும் அவளது லட்சியத்தை அறிந்து அவளுக்கு துணையாக அயராது உழைத்தார்.


இன்று அவள் சொந்த வீடு கட்டி வசதியாக இருக்கிறாள். ஆனால் அதில் அவளுக்கும் ஏற்படும் மகிழ்ச்சியைவிட "உங்கள் பிள்ளைகளா அவர்கள்? என்னாமாய் படிக்கிறார்கள்..! எங்கு வேலைச் செய்கிறார்கள்?", என அனைவரும் கேட்கும் பொழுது, தனக்கே உரிய பாணியில் " அவர்கள் மருத்துவர்கள், அவர்கள் பொறியாளர்கள்" என்று சொல்கையில் பன்மடங்கு மகிழ்ச்சியடைகிறாள்.


மலேசியா சுதந்திரம் அடைந்து ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் இப்பொழுதுதான் அவள் தனது சுதந்திரத்தை உணர்கிறாள்...

06 July 2007

கறுப்பு

"கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.. அவன் கண்ணு இரண்டும்...."என வானொலியில் ஒலிபரப்பிக் கொண்டிருந்த அந்த பாட்டைக் கேட்டவுடன் ஆத்திரத்துடன் அதனை அடைத்தாள் வாசுகி. "ஏன், என்ன ஆச்சு. பாட்டு நல்லா தானே இருக்கு? இப்பொ ஏன் அதை அடைச்ச" என வினவினாள் அவளது தோழி வசந்தா.

"ஆமாம். பெண்களுக்கு மட்டும் தான் இந்த கறுப்புக் கலர் பிடிக்கும். எங்காவது ஆம்பளைங்க எனக்கு கறுப்புதான் பிடிக்கும்னு சொல்லியிருக்காங்களா? " என பொங்கி எழுந்தால் வாசுகி. அவளது ஆத்திரத்தை நன்கு புரிந்துக் கொண்டாள் வசந்தா.

ஆம் வாசுகியின் தோல் வர்ணம் கறுப்பு. சிறு வயது முதல் இந்த வர்ணத்தை பொருட்டாக அவள் கருதியதில்லை. படிப்பில் மிகவும் கெட்டி. தனது தோழிகள் தங்கள‌து சருமத்தைப் எப்படி பாதுகாப்பது, எப்படி வெண்மை ஆக்குவது என்பதை அவர்கள் பேசும் பொழுதும் கூட அவள் தனது வர்ணத்தை பொருட்டாக நினைத்தது இல்லை. அவளைப் பொறுத்தவரை அவளுக்கு முக்கியம் தனது படிப்பு, வாழ்க்கையில் தான் ஒரு உயரிய நிலையை அடைய வேண்டும். இதைதான் தனது வாழ்க்கையின் குறிக்கோளாக எண்ணியிருந்தாள்.

ஆனால் அறிவைவிட புற அழகு தான் முக்கியம் என ஒருவன் கூறிவிட்டான். அவன் பெயர் குணா. வாசுகிக்கு ஒரு நல்ல வரனை அவர்களின் வீட்டில் தேடியிருந்தார்கள். அவளை கட்டாயப்படுத்தி சம்மதம் வாங்கி, பெண்பார்க்க வரச் சொல்லியிருந்தார்கள்.

குணா, ஒரு கணினி மென்பொருளாளராக பணிபுரிகின்றான். அம்மா அப்பா மற்றும் ஒரு தங்கை. நால்வர் அடங்கிய குடும்பம். மாநிறமாக இருப்பான். குணாவின் அம்மா வாசுகியின் அம்மாவின் தோழி. அவரும் வாசுகியை பல முறைப் பார்த்திருக்கிறார். அவளின் மரியாதைக் குணம் மிகவும் பிடித்திருந்தது. ஆகவே அவராகவே வாசுகியை பெண் கேட்டார். நல்ல வரன் என்றால், எந்த பெற்றோர்தான் வேண்டாம் என்பார்கள்.

ப‌ட்டு புட‌வை கையில் தேநீருட‌ன் வ‌ந்தாள் வாசுகி. குணாவின் முக‌மோ ச‌ற்று க‌டுப்பாக‌ இருந்த‌து. என்ன‌டா இது என‌ ச‌ற்று ம‌ன‌ பார‌த்துட‌ன் உள்ளே சென்று விட்டாள். குணாவின் அம்மா, வாசுகியின் தோழி என்ப‌தால் அவ‌ர்க‌ளுக்கு சிறிய‌ விருந்தினை ஏற்பாடு செய்திருந்தார்க‌ள். சாப்பிட்டு கை க‌ழுவ‌த‌ற்கு குணா ம‌ற்றும் அவ‌ன‌து அம்மாவும் ச‌ம‌ய‌ல் அறைக்கு சென்றிருந்த‌ வேளையில் அங்கு எதார்த்த‌மாக‌ குணா பேசிய‌து அவ‌ள‌து காதில் விழுந்த‌து.

"என்ன‌ அம்மா இது? பொண்ணு க‌றுப்புனு சொன்னீங்க‌, ஆனா காக்கா க‌ல‌ருனு சொல்ல‌வே இல்லை"க‌டுப்பான‌ குர‌லில் குணா. "டேய் என்ன‌டா? இப்ப‌டி சொல்லுற‌. அவ‌ த‌ங்க‌ம்டா. ரொம்ப‌ ந‌ல்ல‌வ. க‌ல‌ரா முக்கிய‌ம்!?" என்றார் அவ‌னின் அம்மா. "என‌க்கு முக்கிய‌ம் அம்மா. நீங்க‌ சும்மா இருங்க‌. என்னோட‌ ஃப்ர‌ண்ஸ் கிட்ட‌ அறிமுக‌ம் ப‌ன்னும் போது என‌க்கு பெருமையா இருக்க‌ வேண்டாமா? போங்க‌ம்மா எப்ப‌டியோ என‌க்கு இந்த‌ க‌ல்யாண‌த்துல‌ விருப்ப‌மில்லைனு சொல்லிடுங்க‌" என்றான்.

அனைவ‌ரும் உண்ட‌பிற‌கு விருந்தின‌ர் அறையில் அம‌ர்ந்திருந்தார்க‌ள். வாசுகி த‌ன‌து அம்மாவிட‌ம் எதோ முணுமுணுத்தாள். அவ‌ள‌து அம்மாவோ அவ‌ளை ச‌ற்று எரிச்ச‌லுட‌ன் பார்த்துவிட்டு, குணா அம்மாவிட‌ம் வ‌ந்து "அவ‌ பைய‌ன்கிட்ட‌ பேச‌னுமாம்.." இழுத்தார் வாசுகியின் அம்மா. குணா ச‌ற்று அதிர்ச்சியுட‌ன் "ச‌ரி ஆண்ட்டி.." என‌, இருவ‌ரையும் மொட்டை மாடியில் விட்டுவிட்டார்க‌ள்.

"வ‌ண‌க்கம். உங்க‌ அம்மாகிட்ட‌ நீங்க‌ பேசும்போது நான் அங்க‌ த‌ற்செய‌லாக‌ வ‌ந்தேன். அப்பொ நீங்க‌ சொன்ன‌து கேட்ட‌து. என்னைப் ப‌ற்றி பேச‌ன‌தால‌ கேட்டேன். என் க‌ல‌ரை ப‌ற்றி ரொம்ப‌ வ‌ருத்த‌ப்ப‌ட்டீங்க‌. நீங்க‌ சொல்லுற‌ மாதிரியே ஒரு ந‌ல்ல‌ க‌ல‌ர் பெண்ணை தேர்ந்தெடுத்து க‌ல்யாண‌ம் ப‌ண்ணிகீங்க‌. உங்க‌ அம்மாவுக்கு ஏத்த‌ ம‌ரும‌க‌ளாக‌வும் தேடுங்க‌. ஏன்ன‌ அவ‌ங்க ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ங்க‌. நான் எங்க‌ அம்மாகிட்ட‌ பேசிக்கிறேன் நீங்க‌ கிள‌ம்புங்க‌." என‌ ம‌ட‌ ம‌ட‌ என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்." ம‌ன்னிச்சுடுங்க‌" அப்ப‌டினு குணா சொன்ன‌தைக் கூட‌ அவ‌ள் பொருட்ப‌டுத்த‌வில்லை.

" என்ன‌டீ வாசுகீ? என்ன‌ ம‌றுப‌டியும் அதே நினைப்பா? எல்லோரும் அப்ப‌டி இருக்க‌ மாட்டாங்க‌. அத‌ற்கு ஏன் இப்ப‌டி க‌வ‌லையா இருக்க‌?" வாசுகி த‌ன்னை அறியாம‌ல் இருந்த‌தை அறிந்து வ‌ச‌ந்தா அவ‌ள‌து தோளை உலுக்கினாள்.
"இப்பொழுது என் க‌லரைப் பார்த்து நான் க‌வ‌லை ப‌டவில்லை, ஆனால் ஒன்று ம‌ட்டும் புரிய‌மாட்டேங்குது. அழ‌கான‌ பெண்க‌ள் எத்த‌னை பேர், அழ‌கு வர்ணம் பார்க்காம‌ல் ஆண்க‌ளை க‌ல்யாண‌ம் செய்யுறாங்க‌. ஆனால் எத்த‌னை ஆண்க‌ள் பெண் அழ‌கா இல்லாட்டியும் ப‌ரவாயில்லை ந‌ல்ல‌ ப‌ண்பு இருக்க‌னும்னு சொல்லுறாங்க‌? ஆயிர‌த்தில் ஒருவ‌ர்? அப்பொ மீதி உள்ள‌ பெண்க‌ளின் நிலை என்ன‌? என்ன‌னு ந‌ம்ம‌ சொல்லுற‌து இந்த‌ மாதிரி ஆண்க‌ளை எல்லாம்?" குமுறினாள் வாசுகி.

"இப்பொழுது ஆயிர‌த்தில் ஒருவ‌ர், பிற‌கு நூற்றில் ஒருவ‌ர், இப்ப‌டியே கால‌ம் மாறும். க‌வ‌லை வேண்டாம்" என்றாள் வ‌ச‌ந்தா. "ஆமாம் , நீ சொல்லுர‌து ஒரு நூறு வ‌ருட‌த்திற்கு பிற‌கு தான் ந‌ட‌க்கும், ஹா ஹா" என‌ எப்ப‌டியோ இருவ‌ரும் சூழ்நிலையை ச‌ற்று திசைத்திருப்பிவிட்ட‌ன‌ர்.

14 June 2007

நட்பு...

மலரும் மொட்டுக்கள் இரண்டு கைக்கோர்த்து அந்த பூங்காவில் வலம் வந்துக்கொண்டிருந்தன.

"எனக்கு அந்த பட்டாம்பூச்சி வேணும்" தனது நண்பனிடம்கேட்டாள் தேவி.

"அய்யோ நான் பிடிக்க மாட்டேன். அம்மா சொன்னாங்க பட்டாம்பூச்சி கையைக் கடிக்குமாம். நான் பிடிக்க மாட்டேன்" என்றான் அச்சத்துடன் அந்த வால்குட்டி மாறன்.

"விஷ்ணு... மற்றும் வசந்த்.. வாங்க, நேரம் ஆச்சு .." ஒரு நடுத்தர வயது பெண்மணி இரண்டு வாண்டுகளையும் அழைத்தாள். தேவியின் முழுப்பெயர் விஷ்ணுதேவி மாறனின் பெயரும் வசந்த மாறன். இருவருக்கும் ஒரு இரண்டு வயது வித்தியாசம் தான்.

அவர்கள் இருவரும் அண்ணன் தங்கை அல்ல. அவர்களின் உறவின் பாலம் நட்பு, நட்பு மட்டுமே.

அண்டைவிட்டாரின் மகன் தான் வசந்த். அவனது வயது ஐந்து. விஷ்ணுவின் வயதோ மூன்று. பிறந்ததிலிருந்தே இவர்களின் நட்பு வளர்ந்தது என்று சொல்லலாம். வசந்த் வீட்டில் ஒரே பிள்ளை, அவனது பெற்றோர்கள் தவமிருந்து பெற்றப் பிள்ளை என்று சொல்லலாம். அவனுக்கு என்று வீட்டில் விளையாட துணை யாரும் இல்லாததால் தேவியுடன் தான் அவனது பொழுதே. ஒன்றாக பள்ளிக்குச் செல்வதும், ஒன்றாக விளையாடச் செல்வதும், வசந்த் அவன் வீட்டிற்குச் செல்வதே உணவு உண்ணவும் உறங்கவும் தான்.

யார் கண் பட்டதோ என்று தெரியவில்லை எப்பொழுதும் துள்ளி திரியும் தேவி அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் வெளியே செல்வதை குறைத்துக் கொண்டாள். வசந்த் அவளை பார்க்கும் நேரம் எல்லாம் அவள் படுக்கையில் படுத்துத்தான் இருப்பாள்.

"அம்மா ஏன்மா தேவி இப்படி இருக்கா? என கூட ஒழுங்காவே பேசமாட்டேங்கறா!. எப்பப் போனாலும் தூங்கிக்கிட்டே இருக்கா அம்மா", "என் கூட பள்ளிக்கு வந்து ரொம்பநாள் ஆச்சு அம்மா!" உண்மையான சூழ்நிலையை அறியாமல் அவன் அவனது அம்மாவை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தான்.

வசந்த்தின் அம்மாவோ பையனுக்கு எப்படி உண்மையை தெரிய வைப்பது என்று திண்டாடினார். "இல்லைடா செல்லம், தேவிக்கு உடம்பு சரியில்லை, காய்ச்சல்; அதான் தேவியால் எங்கேயும் வர முடியலெ. நீ கவலைப் படதே சீக்கிரம் அவள் சரியாகி உன்னோடு விளையாடுவா" என்று சமாளித்தாள்.

வசந்திடம் தேவிக்கு இரத்த புற்று நோய் வந்திருக்கிறது என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?அவனுக்கு தான் அந்த சொல்லின் அர்த்தங்கள் புரியுமா?

அவனும் அம்மாவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்தவனாய் அங்கிருந்து கிளம்பினான். நேராக சாமி அறைக்கு சென்று கை கூப்பி , கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு முணுமுணுத்தான். அவனது அம்மாவோ என்ன செய்கிறான் என்று அறிந்துக் கொள்ளும் ஆவலில் அவனை நெருங்க நெருங்க உண்மை புரிந்தது. அவரது கண்களும் கலங்க ஆரம்பித்தது. "சாமி, தேவி சீக்கிரம் நல்லா ஆகணும்.. சாமி , தேவி சீக்கிரம் நல்ல ஆகணும்" இந்த வார்த்தைகளைத்தான் அவன் திரும்பத்திரும்ப சொல்லி இறைவனை வேண்டிக் கொண்டிருந்தான். அவனை கட்டி அணைத்துக் கொண்டு அவனது அன்னையும் தேவிக்காக மனமுருகி வேண்டினார்.

சில மாதங்கள் கடந்தும் தேவியின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வசந்தும் அவளை அன்றாடம் வீட்டில் வந்து சந்திப்பான். பள்ளியில் என்ன நடந்தது, யார் யார் என்ன செய்தார்கள் என்று அவளிடம் வந்து சொல்வதையே அவனது அன்றாட வேலையாக வைத்திருந்தான்.

ஒரு நாள் அவன் அம்மாதிரி சொல்லிக் கொண்டிருக்கையில் தேவி சட்டென்று சுய நிலையை இழந்தாள். வசந்த் பதறியடித்துக்கொண்டு தேவியின் அம்மாவிடம் சொல்ல, எல்லோரும் அவளை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

அவளை சுற்றி பெரிய பெரிய இயந்திரங்கள் பூட்டினார்கள். பார்க்கவே சற்று பயமாக இருந்தது. வசந்த் தேவிக்கு என்னவாயிற்று என்று ஒன்றும் புரியாமல் கண்ணாடி கதவிற்கு வெளியே நின்று பயத்துடனும் பதட்டத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தான்.

இரண்டு, மூன்று மருத்துவர்கள் வந்தார்கள். தேவியின் அம்மாவிடம் ஏதோ சொன்னார்கள். தேவியின் அம்மா கதற ஆரம்பித்துவிட்டார். வசந்த்துக்கு அடிவயிற்றில் என்னவோ செய்தது. அவனது அம்மாவை இறுக்கமாகக் கட்டி அணைத்துக் கொண்டான்.

மருத்துவர்கள் தேவியின் பிஞ்சு உடல் எந்த ஒரு மருத்துவத்தையும் ஏற்க தயாராக இல்லை. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்று நேரம் குறித்துவிட்டார்கள். அங்குள்ள அனைவரும் அவள் இருந்த அறைக்கு சென்றார்கள். தேவியின் அம்மா தனது மகளின் நிலையை பார்த்து சகிக்க முடியாமல் தனது கணவரின் மேல் மயக்கமாக சாய்ந்துவிட்டார்.

வசந்த், தேவியின் அருகே சென்று கைகளை பிடித்து அழுத்தினான். அவள் கண்களை சற்றுத் திறந்து இலேசாக புன்னகை செய்தாள். அவ்வளவுதான். முணுக் என்ற ஒரு சத்தம் கேட்டது அந்த இயந்திரத்தில் இருந்து. ஒரே பதற்றச் சூழ்நிலை. என்ன நடக்கிறது என்று வசந்தினால் ஓரளவு யூகிக்க முடிந்தது. ஆனால் என்ன பயன் அனைத்தும் முடிந்துவிட்டது. கண்மூடி திறப்பதற்குள் அனைத்தும் முடிந்தாயிற்று. தேவி இவ்வுலகை விட்டுப்போய் விட்டாள். மூன்று தினங்கள் ஆகிவிட்டது.

வசந்த் காய்ச்சலினான் ஒரு வாரம் மிகவும் அவதியுற்றான். தேவி, தேவி என்று முனகினான். எப்பொழுதும் இருக்கும் சுறுசுறுப்பு இப்போதெல்லாம் அவனிடமில்லை. பள்ளிக்கூடம் விட்டு வந்தால் அவன் பாடம் மற்றும் அறை. இப்படிதான் அவனது வாழ்க்கை போய்கொண்டிருந்தது. மிகவும் சுரத்து குறைந்து காணப்பட்டான்.

அவனை பற்றிய கவலையடைந்த அவனுடைய பெற்றோர்கள் அவனுக்கு புதிய சூழ்நிலையை உருவாக்க வேறு நகரில் குடிப் பெயர்ந்தார்கள். அவர்களுக்கு தெரியாது எங்கு போனாலும் வசந்தின் மனதில் என்று மறையாத சுவடாய் தேவியின் அன்பான முகம் இருக்கும் என்பதும் அவனது இதயபீடத்தில் உற்றத் தோழியாய் என்றென்றும் அவள் அமர்ந்திருப்பாள் என்பதும்.

கைநிறைய சம்பளம்
பெரிய வாகனம்
குளிர்சாதன அலுவலகம்
என பல இருந்தும்
என் கால்கள் நாடியது
இந்த வயல்களை தான்

ஒரு பக்க கதை

ஓடாதே.........

என்னை நீ உன் உடலில் எப்பொழுது செலுத்தினாயோ, அன்றிலிருந்து நீ எனக்கு அடிமை. நான் கொஞ்சம் கொஞ்சமாக உன் உயிரைக் குடிக்கப் போகின்றேன்.
என்னை நீ எப்பொழுது தீண்டினாயோ... அன்று முதல் நான் உன்னை ஆட்கொண்டுவிட்டேன். உன்னை அணு அணுவாக உறிஞ்சி, உனது உடலை சிதைக்கப்போகிறேன்.
உன்னை உன் குடும்பத்தை விட்டு பிரித்து, உனது நண்பர்களிடமிருந்து ஒதுக்கி, நடுத்தெருவிற்கு வரவைக்க போகின்றேன். உன்னை கண்டாலே பிறர் அருவருப்பாக உணர்ந்து ஒதுங்கி போகும் அளவிற்கு உன்னை நான் மாற்ற போகின்றேன். சிறுவர்கள் உன்னை கண்டால் கல்லால் அடித்து துரத்துவதை வேடிக்கை பார்க்க போகிறேன். நீ சாக்கடை, குப்பை தொட்டி போன்றவற்றின் அருகில் தெரு நாயும் வெறுக்கும் வண்ணம் கடும் துர்நாற்றத்துடன் ஈக்கள் மோய்க்க ஒடுங்கி உட்கார்ந்திருக்க போவதை பார்க்கப்போகிறேன்.
நீ என்னிடம் இருந்து எங்கு ஓடினாலும் உன்னை துரத்தி துரத்தி இழுக்கப்போகிறேன் என்று வெறியுடன் சொன்னது போதைப் பொருள்.

06 May 2007

உன்னை உண்ர்கின்றேன்...


பொல்லாத உலகம் வேண்டமென்று

தனியே போகையில்

நீ வருவது

எனக்கு நம்பிக்கை தருகிறது

04 May 2007



08 April 2007

எனது முதல் முயற்சி கவிதையில்... ஆசிரிய‌ரிடம் இருந்து ஒரு கொட்டும் வாங்கிக் கொண்டேன்...

சட்டை

சாலையில் சட்டை இல்லாமல்
போகும் சிறுவர்களை
பார்த்துக் கொண்டிருக்கையில்
மேசையில் சிணுங்கியது
சட்டை போட்டிருக்கும்
எனது அலைபேசி.

08 February 2007

அரசியல்வாதி ஆக மாட்டேன்....

அரசியல் என்றாலே எனக்கு வெறுப்பு.. ஏனோ தெரியவில்லை.. அந்த பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன். ஏன்?

பெரிய காரணம் ஒன்றுமில்லை. அரசியலில் சேர்ந்தாலே பூவுடன் சேர்ந்து நாறும் மணக்கும் என்று சொல்வார்கள். நாம் நல்லது செய்தாலும் நம்மை சுற்றி நடக்கும் கெட்டதையும் நம் தலையில் திணித்துவிடுவார்கள். என்னதான் நல்லது செய்தாலும் நமக்கு எப்பொழுதும் நல்ல பெயர் மட்டுமே கிடைப்பதில்லை. அனைவரிடமும் திட்டு வாங்குகிற அளவிற்கு எனக்கு மன தைரியமில்லை.

அது மட்டுமல்லாமல் இன்னும் சிலர் சொல்வார்கள், நீ என்ன தான் நல்லவனா இருந்தாலும் உன்னை அங்க மாற்றிடுவாங்கனு.. அதான்.. நல்லவனா இருக்கிற என்னை தீயவனா மாற்றிவிட்டால்? அப்புறம் நான் நினைத்தாலும் என்னை நான் மாற்ற முடியாது...
ஆனால் யார் அப்பொ ஊரை திருத்துவது? யாராவது ரொம்ப நல்ல தைரியசாலி, எதுக்கும் பயப்படாம, யாராலும் தன்னை மாற்ற முடியாதுனு நினைக்கிறவங்க ஆகலாம்.

ஆனால் ஒன்னு.. கண்டிப்பா அவர் இறந்த பிறகு அவர் நல்லவரா கெட்டவரா என்று ஒரு பெரிய பட்டிமன்றமே நடக்கும்.. ஊர் எங்கயும்....

2006 End

கால்கள் வலியை தாளாமல் தள்ளாடி கீழே விழ எத்தனித்தது... மங்கலாக சற்று தூரத்தில் ஒரு சிறு ஒளி வட்டம் கண்ணுக்கு தெரிந்தது. இந்த வெளிச்சமில்லாத இருண்ட இடத்தில் இருந்து வெளியேற கால்கள் துடித்தன. முட்களின் மேல் நடந்து வந்ததால் ஏற்பட்ட வலி இன்னும் ஆறவில்லை. முன்பை விட வலி கொஞ்சம் குறைந்திருந்தாலும், முட்களின் கூர்மையை அவை இன்னும் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தன.

கால்கள் எழுந்து, தான் கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்த்தன. கண்களுக்கு எட்டிய தூரம் வரை அதிகம் முட்களாகவே இருந்தது. ஆனாலும் ஆச்சரியமாக ஆங்காங்கே சில வண்ணப் பூக்களும் மலர்ந்து இருந்தன. முட்களை பார்க்கும் பொழுது கண்கள் குளமாகியது. அந்த சம்பவங்கள் மட்டும் ஏன் தான் பசுமரத்தாணி போல மனதில் இருக்கின்றனவோ? அவைகளை மனம் மறக்க நினைத்தாலும் இந்த மூளையால் மறக்க முடியவில்லை. அதுதான் நமது இயல்போ?

ஒரு சில பூக்களும் இருக்கின்றனவே! எதற்காக அவை மலர்ந்து இருக்கின்றன? மூளை யோசித்தது. என்ன ஆயிற்று?அந்த காலகட்டத்தில் என்ன நடந்தது? கடந்த வந்த இந்த முன்னூற்றி அறுபத்து நான்கு நாட்களில் என்ன நடந்தது என்று மூளையில் பதிவா செய்ய முடியும்?

கைகள் மெதுவாக குறிப்பேட்டை பையிலிருந்து எடுத்து புரட்ட தொடங்கியது. அய்யோ பாவம் அந்த குறிப்பேடு வெண்மையாக இருந்தது. ஒரு துளி மையின் கரை கூட அதில் இல்லை. அதைப்பார்த்து தன்னைதானே கடிந்துக் கொண்டது அந்த கைகள். எத்தனை தடவை மூளை சொல்லியிருக்கும் அன்று நடந்தவற்றை பதிவு செய்ய, ஆனால் சோம்பேறித்தனத்தினால் அதை செய்யாமல் இருந்ததற்கு இன்று தண்டனையாக எப்பொழுது என்ன நடந்தது என்பது சட்டென்று நினைவிற்கு வரவில்லை.

சரி மெதுவாக சென்று அந்த ஒளிவட்டத்தை அடைந்த பிறகாவது நாம் இனி சந்திக்கப்போகும் நாட்களையும் அந்நாட்களில் நடக்கும் நிகழ்வுகளையும் எழுத தொடங்கலாமே.... ...இதோ மெதுவாக நடக்க தொடங்குகிறேன்...... நீங்களும் கூடத்தானே?அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

18 January 2007

கனவே கலைந்து விடு

"சார் .. சார் ..", யாரோ தன்னை அழைப்பது போன்ற ஒரு உணர்வு. எதையும் பொருட்படுத்தாமல் அவன் தனது போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு தனது தூக்கத்தை தொடர்ந்தான்.
"சார்.. சார்" அதே குரல் மீண்டும் கேட்டது "என்னடா இது ஒரு மனுஷனெ நிம்மதியா தூங்கவிடுறங்களா!?" இவள் எங்கே போய் தொலைந்தாள், என எரிச்சலுடன் மனைவியை கூப்பிட்டான், இல்லை கத்தினான். தனது கூச்சலுக்கு யாரும் பதில் அளிக்காததை கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டான்.
"என்னடா! இது எப்பொழுதும் வீட்டில் இருக்கும் இவள் இன்று எங்கே போய் தொலைந்தாள்?", என்று குரல் கேட்ட திசையை நோக்கி முணுமுணுத்துக்கொண்டெ எரிச்சலுடன் சென்றான்.
"சார்...சார்", இன்னும் அந்த குரலின் தொந்தரவு நிற்கவில்லை. "யார்டா இது?.. இப்படி ரொம்ப நேரமா கழுத்தை அறுக்கிறானே." என்று முனகிக் கொண்டே வாசல் கதவை திறந்தார்.
"என்ன இது ஏன் இவ்வளவு கூட்டம்...?" என்ற தனது வியப்பை அடக்கிக் கொண்டு. "என்ன சார்! ஏன் இவ்ளோ கூட்டம்? என்ன ஆச்சு இப்பொ?", என சராமாரியாக கூட்டத்தை பார்த்து கேள்விகளை கேட்டார்.
கூட்டத்தில் ஒருவர், "உங்க பேரு ராஜன் தானே சார்?", "ஆமாம்" . "நீங்க வாங்கின லாட்டரி சீட்டுக்கு ஒரு லட்சம் விழுந்திருக்கு சார். வாழ்த்துக்கள் சார். அதான் உங்களை பேட்டி எடுக்க நிறைய பத்திரிகைகளில் இருந்து நிருபர்கள் வந்து இருக்காங்க", ஒருவர் சொல்லி முடிப்பதற்குள் அவனை சுற்றி இருந்தவர்கள் மாறி மாறி அவனிடம் கேள்வி கேட்க தொடங்கினார்கள்."சார் எப்படி நீங்க இவ்வளவு அதிர்ஸ்டசாலியா இருக்கீங்க? ஏதாவது தனி பயிற்சி எடுக்கறீங்களா?" இப்படி அர்த்தம் இல்லாத பல கேள்விகள் அவனை அம்பு மாதிரி துளைத்து எடுத்தன. அப்பொழுதே நினைத்தான் , என்னடா இது கேள்விகள் எல்லாம் சற்று கோமாளிதனமாக இருக்கிறதே என்று. அந்த எண்ணங்களை சற்று தள்ளி வைத்து விட்டு அவன் அவர்களுக்கு பதில் சொலல முயற்சித்தான்.
"சார் இங்க பாருங்க.. சிரிங்க சார்.." என்று ஒருவர் கூட்டத்தில் இருந்து தனது கையில் உள்ள கேமிரா மூலம் புகைப்படம் எடுக்க முயற்சித்தார். அவரது கேமிராவில் இருந்து வந்த ஒளியால் கண்கள் கூசியதுமல்லாமல் ஏதோ ஈரமாக இருப்பது போல உணர்வு?!
ஈரமா!, "அய்யோ அம்மா " என்று அலறியடித்துக் கொண்டு தனது கட்டிலில் இருந்து விழுந்தான் ராஜன். கண் விழித்து பார்த்ததில் தான் தெரிந்தது அவரது மனைவி கையில் ஒரு காலி குடத்துடன் அங்கே நின்று கொண்டிருந்தாள். அருகில் பார்த்தான். தண்ணீர் அறை முழுவதும் கொட்டியிருந்தது. தூக்க கலக்கத்தில் கட்டிலுக்கு அருகில் மனைவி எடுத்து வைத்திருந்த குடத்தை உதைத்திருந்ததும் அதிலிருந்து தண்ணீர் கொட்டியிருந்ததும் தெரிந்தது.
"என்னடீ.. என்ன செஞ்ஜெ" என்று தனது ஆத்திரத்தை மனைவியிடம் காட்டினான். " என்னங்க, வேலைக்கு நேரம் ஆச்சு. உங்களால இப்பொ ஒரு குடம் தண்ணீர் வீணாக்ப் போயிடுச்சு. சீக்கிரம் வேலைக்கு கிளம்புங்க..".
"ஏன்டி என் உயிரை வாங்குறெ காலங்காத்தால...? ஒரு ஆயிரம் வெள்ளி சம்பளத்துக்காக என்னை இப்படி வாட்டி எடுக்கிறேயே... இன்னும் கொஞ்ச நாள்ல பாரு எனக்கு ஒரு லட்சம் கிடைக்க போகுது. அப்போ நான் இருபத்தி நாலு மணி நேரமும் தூங்கத்தான் போறேன். அப்ப நீ என்னிடம் இப்படி எல்லாம் தொந்தரவு செய்ய மாட்டே!" தனது கணவனின் இந்தப் பேச்சைக்கேட்டு அவள் தன்னையே நொந்துக்கொண்டு தன் தலையிலடித்துக்கொண்டாள்.
இது அன்றாடம் அவளது வாழ்க்கையில் நடப்பது தான். காலையில் தனது கணவரை மிகவும் சிரமப்பட்டு வேலைக்குச் அனுப்ப அவள் படும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. இவளுக்கு வேலைக்கிடைத்தப்பிறகுதான் சூழ்நிலையில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டது. வீட்டுக்கு தேவையான பொருட்களை முடிந்த அளவு அவளே வாங்கி சமாளித்துக்கொள்கிறாள். இருந்தாலும் வீட்டு வாடகை, மின் கட்டணம், குழந்தைகளுக்கான பள்ளிக்கட்டணம் போன்ற செலவுகளுக்கு பல நேரங்களில் தனது கணவரின் கையை அல்லவா அவள் எதிர்பார்க்க நேரிடுகிறது.
முன்பு எல்லாம் ராஜன் இப்படி இல்லை. மிகவும் பொறுப்புள்ள மனிதராக இருந்தார். ஆரம்பத்தில் தனது சம்பளத்தில் இருந்து ஒரு மிகச்சிறியதொரு தொகையை மட்டும் லாட்டரி எடுக்க செலவழிப்பான். இரண்டு மூன்று தடவை அவருக்கு அதிர்ஷ்டவசமாக கொஞ்சம் தொகை கிடைத்தது. அதில் இருந்து லாட்டரிமேல் அவருக்கு ஒரு வெறி ஏற்பட்டுவிட்டது. இந்த வெறியானது நாளடைவில் அவன் குடும்பத்திற்கே சோதனையாக வந்தது. முதலில் சிறு தொகையை செலவழித்தவன், பிறகு தனது முழு சம்பளத்தையும் லாட்டரிக்கே செலவழித்தான்.
பாவம் அவனது மனைவி, ராஜனின் இந்த மாற்றத்தால் மிகவும் நொந்து போனாள். இதனால அடிக்கடி வீட்டில் சண்டை. காலப்போக்கில் சண்டை போடுவதால் எந்த பயனுமில்லை என்று தெரிந்துக் கொண்டு அவளே ஒருமுடிவுடன் வேலைக்கு செல்லத் தொடங்கினாள்.படிப்பறிவு குறைவாக இருந்ததால் ஒரு சிறிய தொழிற்சாலையில் சாதாரண தொழிலாளி வேலைத்தான் அவளுக்கு கிடைத்தது. தனது கணவரின் பொறுப்பில்லாத செயலால் பிள்ளைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தால்தான் அவள் சிரமத்தைப் பாரக்காமல் அந்த வேலைக்கு சென்று வருகிறாள்.
அன்றும் அப்படிதான் அவள் தனது வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வரும் வழியில் சாலையை கடக்கையில் வேகமாக வந்த ஒரு லாரியில் மோதி மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டாள். இந்த செய்தி தெரிந்தவுடன் அரக்க பரக்க மருத்துவமனைக்கு ஓடினான் ராஜன். அங்கு கால் முறிவு ஏற்பட்டதால் அவளுக்கு ஒரு அவசர சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அதற்கு உண்டான பணத்தை சீக்கிரம் மருத்துவமனையில் கட்டுமாறும் மருத்துவர் கூறிவிட்டார்.
கையை பிசைந்து நின்றான் ராஜன். அவனது பணப்பையில் இருந்தது சில .. இல்லை இல்லை பல லாட்டரி சீட்டுகள் மட்டுமே. தன் சம்பளத்தில் முக்கால் வாசி வெறும் லாட்டரி சீட்டுகள் மட்டும் வாங்கவே செலவழித்து விட்டான். இப்பொழுது அவ்வளவு பெரிய தொகைக்கு எங்கு செல்வது? யாரை கேட்பது?
என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தான். வீட்டிற்கு சென்று மனைவியின் நகைகள் ஏதாவது கிடைக்கிறதா என பார்க்கலாம் என்று எண்ணினான். வீட்டிற்கு சென்று அலமாரிகளை அலசினான். அங்கு ஏராளமான லாட்டரி சீட்டுக்கள் அடுக்கிவைக்கப்பட்டிருப்பது அவன் கண்ணில் பட்டது. எத்தனை சீட்டுகள். இத்தனை சீட்டுக்களும் அவன் வாங்கியவையா? அவன் கண்களை அவனால் நம்பவே முடியவில்லை. சற்று நேரம் மனக்கணக்கு போட்டான் தான் இந்த சீட்டு வாங்கி கரியாக்கிய பணம் எவ்வளவு என்று. அம்மாடியோவ்! இவ்வளவு தொகையா! இவ்வளவுபணத்தை சேமித்து வைத்து இருந்தால் இந்நேரம் நான் ஒரு நல்ல நிலைக்கு வந்து இருப்பேனே! லாட்டரியில் போட்டுவிட்டேனே என ஒருகணம் வேதனையுடன் நினைத்தான். தனது பொறுப்பற்ற செயலால் இப்பொழுது மருத்துவமனை செலவிற்கு கூட பணமில்லாமல் திண்டாடுவதைக் கண்டு மிகுந்த மனவேதனையும் தன் மீதே வெறுப்பும் கொண்டான். இனிமேல் இம்மாதிரி நடப்பதில்லை என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டான். அவன் கையில் கிடைத்த அவன் மனைவியின் ஒரே ஒரு ஆரம். மிகவும் வருத்தத்துடன் அதை எடுத்துக்கொண்டு கடைக்கு அடகு வைக்க சென்றான். அப்பொழுது ஒரு சிறுவன் "சார் சார் வாங்குங்க லாட்டரி வாங்குங்க சார். ரொம்ப அதிர்ஷ்ட நம்பர் சார். பாருங்களேன் ". கைகள் துறுதுறுக்க அவன் தன்னிடம் காட்டிய எண்களை பார்த்தான். அந்த எண்கள் சுருக்கென்று அவன் மனதில் குத்தியது. ஆம் அது அவனது கல்யாண நாள. அதுவும் இன்று தான் அந்த நாள். அய்யோ மனம் துடித்தது. எப்படி எங்கள் கல்யாண நாளை நான் மறந்து விட்டேன்... அந்த ஓரு கணத்தில் அவன் மனதில் கொஞ்ச நஞ்சம் இருந்த லாட்டரி ஆசையும் மங்கி அழிந்துவிட்டது. வேண்டாம் என்று அச்சிறுவனிடம் கூறிவிட்டு மருத்துவமனையை நோக்கி வேகமாக சென்றான்.
மறுநாள் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அமைதியாக தூங்கிக்கொண்டிருக்கும் மனைவியின் படுக்கைக்கு அருகில் அவன் அன்றைய நாளிதழை புரட்டிக்கொண்டிருக்கும் பொழுது, நேற்று வாங்காத அந்த லாட்டரி எணணுக்கு ஒரு லட்சம் கிடைத்திருப்பதாக பிரசுரித்திருந்தார்கள். ஆனால் அவனுக்கு அதன் மீது நாட்டமும் அல்லது இழந்துவிட்டோமே என்ற ஏமாற்றமோ சிறிதும் ஏற்படவில்லை. உழைப்புதான் உண்மையானது.. இதுப்போன்ற அதிர்ஸ்டம் வரும் என காணும் கனவுகள் நிலையில்லாதவை. நம்மையும் அழித்து, நமது குடும்ப வாழ்க்கையையும் அழித்துவிடும் என்று எண்ணமே அவன் மனதில் நிலைத்திருந்தது. மனவியின் முகத்தைப் பார்த்தான். மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத நிம்மதியான உணர்வு.

மறு வாய்ப்பு

"அம்மா எனக்கு ஐஸ்கிரீம் வேண்டும்!!", சின்னஞ்சிறு வாண்டு ஒன்று தனது அம்மாவின் சேலையை பிடித்துக் கொண்டு சிணுங்கி அழுதுக் கொண்டிருந்தான். அவனது குட்டி உடம்பிற்கு ஒரு குட்டி டீசெர்ட்டும் ஜீன்ஸும் அளவு எடுத்து தைத்தது போல இருந்தது.
தனது அம்மாவிடம் போலியாக சிணுங்கிக் கொண்டு அவன் அழுதது சற்று வேடிக்கையாக இருந்தது. தனது அம்மாவுக்கு பிள்ளைகள் அழுவது பிடிக்காது என்று அந்த வயதிலேயே நன்றாக தெரிந்து வைத்திருந்தான் தருண்.
"என்னடா கண்ணா?, என்ன ஆச்சு? இப்போ தானே டாக்டர் மாமா கிட்ட போயிட்டு வந்தோம். இன்னும் ஊசி போடணுமா? "என்று தனது அம்மா கேட்டவுடன் அவசரமாக வேண்டாமம்மா என்று மறுதளித்தான். அவன் கண்கள் குளமாகியதைப் பார்த்து பதறினாள் மாதவி.
"சரிடா கண்ணா, ஊசி வேண்டாம். இப்போ ஐஸ்கிரீமும் வேண்டாம். நான் உனக்கு இரண்டு வாரம் கழிச்சி வாங்கித்தர்றேன்" என்று தனது சுட்டிப் பிள்ளையை சமாளித்தாள் மாதவி.
"அப்பா....! அவர்களை நோக்கி நடந்து வந்துக் கொண்டிருந்த அப்பாவை நோக்கி ஓடினான் தருண். "அப்பா..அப்பா, அம்மா எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தர்றதா சொல்லி இருக்காங்க. நீங்களும் ஒண்ணு வாங்கித்தரணும்!" என்று அன்பு கட்டளையிட்டான். அந்த அன்புக் கட்டளைக்கு தலையை ஆட்டினார் ராகவன்.
ராகவனுக்கும் மாதவிக்கும் கல்யாணம் ஆகி பன்னிரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. மணவாழ்க்கை நன்றாக இருந்தாலும் நீண்ட காலம் பிள்ளையில்லாமல் அவர்கள் ஏங்கி வந்தார்கள். அவர்களின் அந்த ஏக்கத்தை தீர்த்தவன் தருண். பன்னிரண்டு வருடங்கள் குழந்தைப் பிறக்காமல் அவர்கள் பட்ட துன்பம் கொஞ்சநஞ்சமல்ல. மாதவியை உற்றார் உறவினர்கள் அவதூறு பேசியும் தூற்றியும் கேவலப்படுத்தியது எல்லாம் இன்னும் ராகவன் நினைவில் மாறாத வடுக்களாக இருக்கின்றது.
மருத்துவர் சான்றிதழ் வைத்து இருந்தாலும் மாதவியை மட்டுமே குறைக் கூறியது உறவினர்கள் கூட்டம். இவர்களுக்கு நூறு சதவிதம் பிள்ளைகள் பெற தகுதியும், வாய்ப்பும் இருக்கிறது என்று மருத்துவர்கள் பலமுறை கூறி இருந்தாலும் அதை பற்றி சிறிதும் சிந்திக்காமல் மனசாட்சியே இல்லாமல் பலமுறை இவர்களின் நிம்மதியை குலைக்கும் வண்ணம் பேசியும், ஏசியும் வந்தார்கள். ஆனால் யார் எப்படி பேசினாலும் தனது மனவியை எந்தக் காரணம் கொண்டும் ராகவன் விட்டுக் கொடுக்கவில்லை. ஒரு பிள்ளையைத் தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று மாதவி பலமுறை எவ்வளவோ எடுத்துக் கூறினாலும், அப்படி எடுத்தால் அது நமக்கு இரண்டாவது பிள்ளையாக மட்டும் தான் இருக்கவேண்டும். மேலும் இப்பொழுது தத்து எடுத்தால் அது நமக்குள் ஒரு குறை இருப்பதை ஒத்துக் கொள்வதற்கு சமம் என்று பிடிவாதமாக மறுப்பு தெரிவித்து விட்டான்.
இறைவன் அவர்களை ஏமாற்றவில்லை. தாமதமாக இருந்தாலும் தருண் வடிவில் அவர்களின் வேண்டுதலை இறைவன் நீண்ட காலம் கழித்து நிறைவேற்றினான். தருண் அவர்கள் வாழ்க்கையில் வந்ததில் இருந்து இது வரைக்கும் ஒரு துளி துன்பத்தைக்கூட அவர்கள் உணர்ந்தது இல்லை.
வாகனத்தை ஓட்டிக்கொண்டு பழைய நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டிருந்த ராகவன் மனைவியின் குரலை கேட்டு நிகழ்காலத்திற்கு வந்தார். பன்னிரெண்டு வருடம் காத்திருந்தாலும் அந்த காத்தல் வீண்போகவில்லை என்று மனம் மகிழ்ந்தது. .
மாதவியிடம் பேசிக் கொண்டே தனது வாகனத்தை செலுத்தினார். திடீர் என்று அவரின் கைதொலைபேசி அலறும் சத்தம் கேட்டது. அவரோ தன்னிடம் இருக்கும் காது இணைப்பானை பயன்படுத்தாமல் ஒரு கையால் வண்டியை ஓட்டிக்கொண்டே மறுகையால் கைப்பேசியில் உரையாடினார். அழைத்தது யாருமில்லை அவரது அம்மாதான்.
அந்த அழைப்பு அவரின் கவனத்தை சிறிது சிதற வைத்தது. அவருக்கு முன்னால் மிகவும் மெதுவாக ஒரு சரக்கு வாகனம் ஆமை போல நகர்ந்துக்கொண்டிருந்தது. அதை தாண்டுவதற்காக அடுத்தப் பாதைக்கு மாறினார். அப்பொழுது மிகவும் வேகமான அடுத்த பாதையில் வந்துக் கொண்டிருந்த ஒரு வேனை கண்டதும் என்ன செய்வது என்று புரியாமல் ஒரு கணம் தடுமாறினார். அந்த கணத்தில் அவருக்கு கேட்டதெல்லாம் ஒரு பயங்கரமான க்ரீச்...சத்தம் மட்டுமே.
****************************************************************************************************
மீண்டும் ராகவனுக்கு நினைவு திரும்பும்பொழுது அவர் படுக்கையை சுற்றி அவனது பெற்றோர்களும் அவனது ஒரே தங்கையும் அழுதுக்கொண்டிருந்தனர். ராகவனால் தலையை கொஞ்சமும் அசைக்க முடியவில்லை. மிகவும் பாரமாக இருந்தது. அதை விட அவனது நெஞ்சு மிக பயங்கரமாக வலித்தது. அவனால் அந்த வலியை கொஞ்சம்கூட தாங்க முடியவில்லை. ஏதேதோ நினைவுகள் வந்து வந்து போயின. எதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியவில்லை.
திடீரென்று ஒரு குழந்தையின் அழுக்குரல் எங்கேயோ தூரத்தில் கேட்பது போல இருந்தது. ஆஹா... நினைவுக்கு வந்து விட்டது "தருண்... மாதவி!!" அவர்கள் எங்கே? அவர்களும் என்னுடன் தானே இருந்தார்கள்? அவர்களுக்கு என்ன ஆயிற்று? ஒன்றும் புரியவில்லை, பேசவும் முடியவில்லை. மூளை மரத்தது போல இருந்தது. தலையில் ஆணியால் அடிப்பது போல ஒரு உணர்வு. மிகவும் கஸ்டப்பட்டு அந்த வலியையும் பொருட்படுத்தாமல் மாதவி தருண் என்று முனகினான்.
அவனை சுற்றி இருந்தவர்கள் என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்தார்கள். உண்மை சம்பவத்தை எப்படி சொல்வது? சொல்லாமல் எப்படி இருப்பது என்றும் யாருக்கும் தெரியவில்லை.
அவர்களின் முகவாட்டம் இன்னும் மனதில் பயத்தை உண்டாக்கியது. ராகவனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தன் உடலை அசைக்கும் பொழுது மரண வலிதான் அவனுக்கு ஏற்பட்டது.
எழவும் முடியாமல் பேசவுல் முடியாமல் அவன் பட்ட வேதனையை தாங்காமல் உண்மையை போட்டு உடைத்தாள் அவனது தங்கை. "அண்ணியும் தருணும் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே இறந்துட்டாங்க அண்ணா!" என்று கூறி ஓவென்று அழுதாள்.
அதைக் கேட்ட மறுகணம் ராகவன் தனது சுயநினைவை இழந்தார். அவனுக்கு எல்லாமே இருட்டாக தெரிந்தது. மீண்டும் நினைவு திரும்பும் பொழுது ராகவன் விபத்துக்குள்ளாகி ஐந்து நாட்கள் ஆகியிருந்தது.
இப்பொழுது அவனது நிலை சற்றே தேறி இருந்தது. மனைவி மகனை இறுதியாக கூட ஒருமுறையேனும் தனக்கு பார்க்க கொடுத்துவைக்கவில்லையே என்ற தாங்க முடியாத வேதனையில் கண்கள் நீர்கோத்து நின்றது. அன்று மட்டும் தான் கவனமாக ஓட்டிச் சென்றிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது அல்லவா? கடவுளே எனக்கு தயவு செய்து இன்னுமொரு வாய்ப்பை தா. என்னை மறுபடியும் அந்த விபத்து நடப்பதற்கு முன்பிருந்த நிலைக்கு கொண்டு செல். இந்த கொடூரம் நிகழாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். அன்று மட்டும் நான் வாகனம் ஓட்டும்போது கைப்பேசியில் பேசாமல் சிறிது கவனமாக இருந்திருந்தால்........