18 January 2007

கனவே கலைந்து விடு

"சார் .. சார் ..", யாரோ தன்னை அழைப்பது போன்ற ஒரு உணர்வு. எதையும் பொருட்படுத்தாமல் அவன் தனது போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு தனது தூக்கத்தை தொடர்ந்தான்.
"சார்.. சார்" அதே குரல் மீண்டும் கேட்டது "என்னடா இது ஒரு மனுஷனெ நிம்மதியா தூங்கவிடுறங்களா!?" இவள் எங்கே போய் தொலைந்தாள், என எரிச்சலுடன் மனைவியை கூப்பிட்டான், இல்லை கத்தினான். தனது கூச்சலுக்கு யாரும் பதில் அளிக்காததை கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டான்.
"என்னடா! இது எப்பொழுதும் வீட்டில் இருக்கும் இவள் இன்று எங்கே போய் தொலைந்தாள்?", என்று குரல் கேட்ட திசையை நோக்கி முணுமுணுத்துக்கொண்டெ எரிச்சலுடன் சென்றான்.
"சார்...சார்", இன்னும் அந்த குரலின் தொந்தரவு நிற்கவில்லை. "யார்டா இது?.. இப்படி ரொம்ப நேரமா கழுத்தை அறுக்கிறானே." என்று முனகிக் கொண்டே வாசல் கதவை திறந்தார்.
"என்ன இது ஏன் இவ்வளவு கூட்டம்...?" என்ற தனது வியப்பை அடக்கிக் கொண்டு. "என்ன சார்! ஏன் இவ்ளோ கூட்டம்? என்ன ஆச்சு இப்பொ?", என சராமாரியாக கூட்டத்தை பார்த்து கேள்விகளை கேட்டார்.
கூட்டத்தில் ஒருவர், "உங்க பேரு ராஜன் தானே சார்?", "ஆமாம்" . "நீங்க வாங்கின லாட்டரி சீட்டுக்கு ஒரு லட்சம் விழுந்திருக்கு சார். வாழ்த்துக்கள் சார். அதான் உங்களை பேட்டி எடுக்க நிறைய பத்திரிகைகளில் இருந்து நிருபர்கள் வந்து இருக்காங்க", ஒருவர் சொல்லி முடிப்பதற்குள் அவனை சுற்றி இருந்தவர்கள் மாறி மாறி அவனிடம் கேள்வி கேட்க தொடங்கினார்கள்."சார் எப்படி நீங்க இவ்வளவு அதிர்ஸ்டசாலியா இருக்கீங்க? ஏதாவது தனி பயிற்சி எடுக்கறீங்களா?" இப்படி அர்த்தம் இல்லாத பல கேள்விகள் அவனை அம்பு மாதிரி துளைத்து எடுத்தன. அப்பொழுதே நினைத்தான் , என்னடா இது கேள்விகள் எல்லாம் சற்று கோமாளிதனமாக இருக்கிறதே என்று. அந்த எண்ணங்களை சற்று தள்ளி வைத்து விட்டு அவன் அவர்களுக்கு பதில் சொலல முயற்சித்தான்.
"சார் இங்க பாருங்க.. சிரிங்க சார்.." என்று ஒருவர் கூட்டத்தில் இருந்து தனது கையில் உள்ள கேமிரா மூலம் புகைப்படம் எடுக்க முயற்சித்தார். அவரது கேமிராவில் இருந்து வந்த ஒளியால் கண்கள் கூசியதுமல்லாமல் ஏதோ ஈரமாக இருப்பது போல உணர்வு?!
ஈரமா!, "அய்யோ அம்மா " என்று அலறியடித்துக் கொண்டு தனது கட்டிலில் இருந்து விழுந்தான் ராஜன். கண் விழித்து பார்த்ததில் தான் தெரிந்தது அவரது மனைவி கையில் ஒரு காலி குடத்துடன் அங்கே நின்று கொண்டிருந்தாள். அருகில் பார்த்தான். தண்ணீர் அறை முழுவதும் கொட்டியிருந்தது. தூக்க கலக்கத்தில் கட்டிலுக்கு அருகில் மனைவி எடுத்து வைத்திருந்த குடத்தை உதைத்திருந்ததும் அதிலிருந்து தண்ணீர் கொட்டியிருந்ததும் தெரிந்தது.
"என்னடீ.. என்ன செஞ்ஜெ" என்று தனது ஆத்திரத்தை மனைவியிடம் காட்டினான். " என்னங்க, வேலைக்கு நேரம் ஆச்சு. உங்களால இப்பொ ஒரு குடம் தண்ணீர் வீணாக்ப் போயிடுச்சு. சீக்கிரம் வேலைக்கு கிளம்புங்க..".
"ஏன்டி என் உயிரை வாங்குறெ காலங்காத்தால...? ஒரு ஆயிரம் வெள்ளி சம்பளத்துக்காக என்னை இப்படி வாட்டி எடுக்கிறேயே... இன்னும் கொஞ்ச நாள்ல பாரு எனக்கு ஒரு லட்சம் கிடைக்க போகுது. அப்போ நான் இருபத்தி நாலு மணி நேரமும் தூங்கத்தான் போறேன். அப்ப நீ என்னிடம் இப்படி எல்லாம் தொந்தரவு செய்ய மாட்டே!" தனது கணவனின் இந்தப் பேச்சைக்கேட்டு அவள் தன்னையே நொந்துக்கொண்டு தன் தலையிலடித்துக்கொண்டாள்.
இது அன்றாடம் அவளது வாழ்க்கையில் நடப்பது தான். காலையில் தனது கணவரை மிகவும் சிரமப்பட்டு வேலைக்குச் அனுப்ப அவள் படும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. இவளுக்கு வேலைக்கிடைத்தப்பிறகுதான் சூழ்நிலையில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டது. வீட்டுக்கு தேவையான பொருட்களை முடிந்த அளவு அவளே வாங்கி சமாளித்துக்கொள்கிறாள். இருந்தாலும் வீட்டு வாடகை, மின் கட்டணம், குழந்தைகளுக்கான பள்ளிக்கட்டணம் போன்ற செலவுகளுக்கு பல நேரங்களில் தனது கணவரின் கையை அல்லவா அவள் எதிர்பார்க்க நேரிடுகிறது.
முன்பு எல்லாம் ராஜன் இப்படி இல்லை. மிகவும் பொறுப்புள்ள மனிதராக இருந்தார். ஆரம்பத்தில் தனது சம்பளத்தில் இருந்து ஒரு மிகச்சிறியதொரு தொகையை மட்டும் லாட்டரி எடுக்க செலவழிப்பான். இரண்டு மூன்று தடவை அவருக்கு அதிர்ஷ்டவசமாக கொஞ்சம் தொகை கிடைத்தது. அதில் இருந்து லாட்டரிமேல் அவருக்கு ஒரு வெறி ஏற்பட்டுவிட்டது. இந்த வெறியானது நாளடைவில் அவன் குடும்பத்திற்கே சோதனையாக வந்தது. முதலில் சிறு தொகையை செலவழித்தவன், பிறகு தனது முழு சம்பளத்தையும் லாட்டரிக்கே செலவழித்தான்.
பாவம் அவனது மனைவி, ராஜனின் இந்த மாற்றத்தால் மிகவும் நொந்து போனாள். இதனால அடிக்கடி வீட்டில் சண்டை. காலப்போக்கில் சண்டை போடுவதால் எந்த பயனுமில்லை என்று தெரிந்துக் கொண்டு அவளே ஒருமுடிவுடன் வேலைக்கு செல்லத் தொடங்கினாள்.படிப்பறிவு குறைவாக இருந்ததால் ஒரு சிறிய தொழிற்சாலையில் சாதாரண தொழிலாளி வேலைத்தான் அவளுக்கு கிடைத்தது. தனது கணவரின் பொறுப்பில்லாத செயலால் பிள்ளைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தால்தான் அவள் சிரமத்தைப் பாரக்காமல் அந்த வேலைக்கு சென்று வருகிறாள்.
அன்றும் அப்படிதான் அவள் தனது வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வரும் வழியில் சாலையை கடக்கையில் வேகமாக வந்த ஒரு லாரியில் மோதி மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டாள். இந்த செய்தி தெரிந்தவுடன் அரக்க பரக்க மருத்துவமனைக்கு ஓடினான் ராஜன். அங்கு கால் முறிவு ஏற்பட்டதால் அவளுக்கு ஒரு அவசர சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அதற்கு உண்டான பணத்தை சீக்கிரம் மருத்துவமனையில் கட்டுமாறும் மருத்துவர் கூறிவிட்டார்.
கையை பிசைந்து நின்றான் ராஜன். அவனது பணப்பையில் இருந்தது சில .. இல்லை இல்லை பல லாட்டரி சீட்டுகள் மட்டுமே. தன் சம்பளத்தில் முக்கால் வாசி வெறும் லாட்டரி சீட்டுகள் மட்டும் வாங்கவே செலவழித்து விட்டான். இப்பொழுது அவ்வளவு பெரிய தொகைக்கு எங்கு செல்வது? யாரை கேட்பது?
என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தான். வீட்டிற்கு சென்று மனைவியின் நகைகள் ஏதாவது கிடைக்கிறதா என பார்க்கலாம் என்று எண்ணினான். வீட்டிற்கு சென்று அலமாரிகளை அலசினான். அங்கு ஏராளமான லாட்டரி சீட்டுக்கள் அடுக்கிவைக்கப்பட்டிருப்பது அவன் கண்ணில் பட்டது. எத்தனை சீட்டுகள். இத்தனை சீட்டுக்களும் அவன் வாங்கியவையா? அவன் கண்களை அவனால் நம்பவே முடியவில்லை. சற்று நேரம் மனக்கணக்கு போட்டான் தான் இந்த சீட்டு வாங்கி கரியாக்கிய பணம் எவ்வளவு என்று. அம்மாடியோவ்! இவ்வளவு தொகையா! இவ்வளவுபணத்தை சேமித்து வைத்து இருந்தால் இந்நேரம் நான் ஒரு நல்ல நிலைக்கு வந்து இருப்பேனே! லாட்டரியில் போட்டுவிட்டேனே என ஒருகணம் வேதனையுடன் நினைத்தான். தனது பொறுப்பற்ற செயலால் இப்பொழுது மருத்துவமனை செலவிற்கு கூட பணமில்லாமல் திண்டாடுவதைக் கண்டு மிகுந்த மனவேதனையும் தன் மீதே வெறுப்பும் கொண்டான். இனிமேல் இம்மாதிரி நடப்பதில்லை என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டான். அவன் கையில் கிடைத்த அவன் மனைவியின் ஒரே ஒரு ஆரம். மிகவும் வருத்தத்துடன் அதை எடுத்துக்கொண்டு கடைக்கு அடகு வைக்க சென்றான். அப்பொழுது ஒரு சிறுவன் "சார் சார் வாங்குங்க லாட்டரி வாங்குங்க சார். ரொம்ப அதிர்ஷ்ட நம்பர் சார். பாருங்களேன் ". கைகள் துறுதுறுக்க அவன் தன்னிடம் காட்டிய எண்களை பார்த்தான். அந்த எண்கள் சுருக்கென்று அவன் மனதில் குத்தியது. ஆம் அது அவனது கல்யாண நாள. அதுவும் இன்று தான் அந்த நாள். அய்யோ மனம் துடித்தது. எப்படி எங்கள் கல்யாண நாளை நான் மறந்து விட்டேன்... அந்த ஓரு கணத்தில் அவன் மனதில் கொஞ்ச நஞ்சம் இருந்த லாட்டரி ஆசையும் மங்கி அழிந்துவிட்டது. வேண்டாம் என்று அச்சிறுவனிடம் கூறிவிட்டு மருத்துவமனையை நோக்கி வேகமாக சென்றான்.
மறுநாள் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அமைதியாக தூங்கிக்கொண்டிருக்கும் மனைவியின் படுக்கைக்கு அருகில் அவன் அன்றைய நாளிதழை புரட்டிக்கொண்டிருக்கும் பொழுது, நேற்று வாங்காத அந்த லாட்டரி எணணுக்கு ஒரு லட்சம் கிடைத்திருப்பதாக பிரசுரித்திருந்தார்கள். ஆனால் அவனுக்கு அதன் மீது நாட்டமும் அல்லது இழந்துவிட்டோமே என்ற ஏமாற்றமோ சிறிதும் ஏற்படவில்லை. உழைப்புதான் உண்மையானது.. இதுப்போன்ற அதிர்ஸ்டம் வரும் என காணும் கனவுகள் நிலையில்லாதவை. நம்மையும் அழித்து, நமது குடும்ப வாழ்க்கையையும் அழித்துவிடும் என்று எண்ணமே அவன் மனதில் நிலைத்திருந்தது. மனவியின் முகத்தைப் பார்த்தான். மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத நிம்மதியான உணர்வு.

மறு வாய்ப்பு

"அம்மா எனக்கு ஐஸ்கிரீம் வேண்டும்!!", சின்னஞ்சிறு வாண்டு ஒன்று தனது அம்மாவின் சேலையை பிடித்துக் கொண்டு சிணுங்கி அழுதுக் கொண்டிருந்தான். அவனது குட்டி உடம்பிற்கு ஒரு குட்டி டீசெர்ட்டும் ஜீன்ஸும் அளவு எடுத்து தைத்தது போல இருந்தது.
தனது அம்மாவிடம் போலியாக சிணுங்கிக் கொண்டு அவன் அழுதது சற்று வேடிக்கையாக இருந்தது. தனது அம்மாவுக்கு பிள்ளைகள் அழுவது பிடிக்காது என்று அந்த வயதிலேயே நன்றாக தெரிந்து வைத்திருந்தான் தருண்.
"என்னடா கண்ணா?, என்ன ஆச்சு? இப்போ தானே டாக்டர் மாமா கிட்ட போயிட்டு வந்தோம். இன்னும் ஊசி போடணுமா? "என்று தனது அம்மா கேட்டவுடன் அவசரமாக வேண்டாமம்மா என்று மறுதளித்தான். அவன் கண்கள் குளமாகியதைப் பார்த்து பதறினாள் மாதவி.
"சரிடா கண்ணா, ஊசி வேண்டாம். இப்போ ஐஸ்கிரீமும் வேண்டாம். நான் உனக்கு இரண்டு வாரம் கழிச்சி வாங்கித்தர்றேன்" என்று தனது சுட்டிப் பிள்ளையை சமாளித்தாள் மாதவி.
"அப்பா....! அவர்களை நோக்கி நடந்து வந்துக் கொண்டிருந்த அப்பாவை நோக்கி ஓடினான் தருண். "அப்பா..அப்பா, அம்மா எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தர்றதா சொல்லி இருக்காங்க. நீங்களும் ஒண்ணு வாங்கித்தரணும்!" என்று அன்பு கட்டளையிட்டான். அந்த அன்புக் கட்டளைக்கு தலையை ஆட்டினார் ராகவன்.
ராகவனுக்கும் மாதவிக்கும் கல்யாணம் ஆகி பன்னிரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. மணவாழ்க்கை நன்றாக இருந்தாலும் நீண்ட காலம் பிள்ளையில்லாமல் அவர்கள் ஏங்கி வந்தார்கள். அவர்களின் அந்த ஏக்கத்தை தீர்த்தவன் தருண். பன்னிரண்டு வருடங்கள் குழந்தைப் பிறக்காமல் அவர்கள் பட்ட துன்பம் கொஞ்சநஞ்சமல்ல. மாதவியை உற்றார் உறவினர்கள் அவதூறு பேசியும் தூற்றியும் கேவலப்படுத்தியது எல்லாம் இன்னும் ராகவன் நினைவில் மாறாத வடுக்களாக இருக்கின்றது.
மருத்துவர் சான்றிதழ் வைத்து இருந்தாலும் மாதவியை மட்டுமே குறைக் கூறியது உறவினர்கள் கூட்டம். இவர்களுக்கு நூறு சதவிதம் பிள்ளைகள் பெற தகுதியும், வாய்ப்பும் இருக்கிறது என்று மருத்துவர்கள் பலமுறை கூறி இருந்தாலும் அதை பற்றி சிறிதும் சிந்திக்காமல் மனசாட்சியே இல்லாமல் பலமுறை இவர்களின் நிம்மதியை குலைக்கும் வண்ணம் பேசியும், ஏசியும் வந்தார்கள். ஆனால் யார் எப்படி பேசினாலும் தனது மனவியை எந்தக் காரணம் கொண்டும் ராகவன் விட்டுக் கொடுக்கவில்லை. ஒரு பிள்ளையைத் தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று மாதவி பலமுறை எவ்வளவோ எடுத்துக் கூறினாலும், அப்படி எடுத்தால் அது நமக்கு இரண்டாவது பிள்ளையாக மட்டும் தான் இருக்கவேண்டும். மேலும் இப்பொழுது தத்து எடுத்தால் அது நமக்குள் ஒரு குறை இருப்பதை ஒத்துக் கொள்வதற்கு சமம் என்று பிடிவாதமாக மறுப்பு தெரிவித்து விட்டான்.
இறைவன் அவர்களை ஏமாற்றவில்லை. தாமதமாக இருந்தாலும் தருண் வடிவில் அவர்களின் வேண்டுதலை இறைவன் நீண்ட காலம் கழித்து நிறைவேற்றினான். தருண் அவர்கள் வாழ்க்கையில் வந்ததில் இருந்து இது வரைக்கும் ஒரு துளி துன்பத்தைக்கூட அவர்கள் உணர்ந்தது இல்லை.
வாகனத்தை ஓட்டிக்கொண்டு பழைய நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டிருந்த ராகவன் மனைவியின் குரலை கேட்டு நிகழ்காலத்திற்கு வந்தார். பன்னிரெண்டு வருடம் காத்திருந்தாலும் அந்த காத்தல் வீண்போகவில்லை என்று மனம் மகிழ்ந்தது. .
மாதவியிடம் பேசிக் கொண்டே தனது வாகனத்தை செலுத்தினார். திடீர் என்று அவரின் கைதொலைபேசி அலறும் சத்தம் கேட்டது. அவரோ தன்னிடம் இருக்கும் காது இணைப்பானை பயன்படுத்தாமல் ஒரு கையால் வண்டியை ஓட்டிக்கொண்டே மறுகையால் கைப்பேசியில் உரையாடினார். அழைத்தது யாருமில்லை அவரது அம்மாதான்.
அந்த அழைப்பு அவரின் கவனத்தை சிறிது சிதற வைத்தது. அவருக்கு முன்னால் மிகவும் மெதுவாக ஒரு சரக்கு வாகனம் ஆமை போல நகர்ந்துக்கொண்டிருந்தது. அதை தாண்டுவதற்காக அடுத்தப் பாதைக்கு மாறினார். அப்பொழுது மிகவும் வேகமான அடுத்த பாதையில் வந்துக் கொண்டிருந்த ஒரு வேனை கண்டதும் என்ன செய்வது என்று புரியாமல் ஒரு கணம் தடுமாறினார். அந்த கணத்தில் அவருக்கு கேட்டதெல்லாம் ஒரு பயங்கரமான க்ரீச்...சத்தம் மட்டுமே.
****************************************************************************************************
மீண்டும் ராகவனுக்கு நினைவு திரும்பும்பொழுது அவர் படுக்கையை சுற்றி அவனது பெற்றோர்களும் அவனது ஒரே தங்கையும் அழுதுக்கொண்டிருந்தனர். ராகவனால் தலையை கொஞ்சமும் அசைக்க முடியவில்லை. மிகவும் பாரமாக இருந்தது. அதை விட அவனது நெஞ்சு மிக பயங்கரமாக வலித்தது. அவனால் அந்த வலியை கொஞ்சம்கூட தாங்க முடியவில்லை. ஏதேதோ நினைவுகள் வந்து வந்து போயின. எதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியவில்லை.
திடீரென்று ஒரு குழந்தையின் அழுக்குரல் எங்கேயோ தூரத்தில் கேட்பது போல இருந்தது. ஆஹா... நினைவுக்கு வந்து விட்டது "தருண்... மாதவி!!" அவர்கள் எங்கே? அவர்களும் என்னுடன் தானே இருந்தார்கள்? அவர்களுக்கு என்ன ஆயிற்று? ஒன்றும் புரியவில்லை, பேசவும் முடியவில்லை. மூளை மரத்தது போல இருந்தது. தலையில் ஆணியால் அடிப்பது போல ஒரு உணர்வு. மிகவும் கஸ்டப்பட்டு அந்த வலியையும் பொருட்படுத்தாமல் மாதவி தருண் என்று முனகினான்.
அவனை சுற்றி இருந்தவர்கள் என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்தார்கள். உண்மை சம்பவத்தை எப்படி சொல்வது? சொல்லாமல் எப்படி இருப்பது என்றும் யாருக்கும் தெரியவில்லை.
அவர்களின் முகவாட்டம் இன்னும் மனதில் பயத்தை உண்டாக்கியது. ராகவனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தன் உடலை அசைக்கும் பொழுது மரண வலிதான் அவனுக்கு ஏற்பட்டது.
எழவும் முடியாமல் பேசவுல் முடியாமல் அவன் பட்ட வேதனையை தாங்காமல் உண்மையை போட்டு உடைத்தாள் அவனது தங்கை. "அண்ணியும் தருணும் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே இறந்துட்டாங்க அண்ணா!" என்று கூறி ஓவென்று அழுதாள்.
அதைக் கேட்ட மறுகணம் ராகவன் தனது சுயநினைவை இழந்தார். அவனுக்கு எல்லாமே இருட்டாக தெரிந்தது. மீண்டும் நினைவு திரும்பும் பொழுது ராகவன் விபத்துக்குள்ளாகி ஐந்து நாட்கள் ஆகியிருந்தது.
இப்பொழுது அவனது நிலை சற்றே தேறி இருந்தது. மனைவி மகனை இறுதியாக கூட ஒருமுறையேனும் தனக்கு பார்க்க கொடுத்துவைக்கவில்லையே என்ற தாங்க முடியாத வேதனையில் கண்கள் நீர்கோத்து நின்றது. அன்று மட்டும் தான் கவனமாக ஓட்டிச் சென்றிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது அல்லவா? கடவுளே எனக்கு தயவு செய்து இன்னுமொரு வாய்ப்பை தா. என்னை மறுபடியும் அந்த விபத்து நடப்பதற்கு முன்பிருந்த நிலைக்கு கொண்டு செல். இந்த கொடூரம் நிகழாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். அன்று மட்டும் நான் வாகனம் ஓட்டும்போது கைப்பேசியில் பேசாமல் சிறிது கவனமாக இருந்திருந்தால்........