08 February 2007

2006 End

கால்கள் வலியை தாளாமல் தள்ளாடி கீழே விழ எத்தனித்தது... மங்கலாக சற்று தூரத்தில் ஒரு சிறு ஒளி வட்டம் கண்ணுக்கு தெரிந்தது. இந்த வெளிச்சமில்லாத இருண்ட இடத்தில் இருந்து வெளியேற கால்கள் துடித்தன. முட்களின் மேல் நடந்து வந்ததால் ஏற்பட்ட வலி இன்னும் ஆறவில்லை. முன்பை விட வலி கொஞ்சம் குறைந்திருந்தாலும், முட்களின் கூர்மையை அவை இன்னும் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தன.

கால்கள் எழுந்து, தான் கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்த்தன. கண்களுக்கு எட்டிய தூரம் வரை அதிகம் முட்களாகவே இருந்தது. ஆனாலும் ஆச்சரியமாக ஆங்காங்கே சில வண்ணப் பூக்களும் மலர்ந்து இருந்தன. முட்களை பார்க்கும் பொழுது கண்கள் குளமாகியது. அந்த சம்பவங்கள் மட்டும் ஏன் தான் பசுமரத்தாணி போல மனதில் இருக்கின்றனவோ? அவைகளை மனம் மறக்க நினைத்தாலும் இந்த மூளையால் மறக்க முடியவில்லை. அதுதான் நமது இயல்போ?

ஒரு சில பூக்களும் இருக்கின்றனவே! எதற்காக அவை மலர்ந்து இருக்கின்றன? மூளை யோசித்தது. என்ன ஆயிற்று?அந்த காலகட்டத்தில் என்ன நடந்தது? கடந்த வந்த இந்த முன்னூற்றி அறுபத்து நான்கு நாட்களில் என்ன நடந்தது என்று மூளையில் பதிவா செய்ய முடியும்?

கைகள் மெதுவாக குறிப்பேட்டை பையிலிருந்து எடுத்து புரட்ட தொடங்கியது. அய்யோ பாவம் அந்த குறிப்பேடு வெண்மையாக இருந்தது. ஒரு துளி மையின் கரை கூட அதில் இல்லை. அதைப்பார்த்து தன்னைதானே கடிந்துக் கொண்டது அந்த கைகள். எத்தனை தடவை மூளை சொல்லியிருக்கும் அன்று நடந்தவற்றை பதிவு செய்ய, ஆனால் சோம்பேறித்தனத்தினால் அதை செய்யாமல் இருந்ததற்கு இன்று தண்டனையாக எப்பொழுது என்ன நடந்தது என்பது சட்டென்று நினைவிற்கு வரவில்லை.

சரி மெதுவாக சென்று அந்த ஒளிவட்டத்தை அடைந்த பிறகாவது நாம் இனி சந்திக்கப்போகும் நாட்களையும் அந்நாட்களில் நடக்கும் நிகழ்வுகளையும் எழுத தொடங்கலாமே.... ...இதோ மெதுவாக நடக்க தொடங்குகிறேன்...... நீங்களும் கூடத்தானே?அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

No comments: